Thursday, June 19, 2008

புதுவையில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த கட்-அவுட் பேனர்கள் அகற்றம்


புதுச்சேரியின் அழகைக் கெடுக்கும் வகையில் நகரப்பகுதிகளில் முக்கியச் சாலைகளில் அனுமதியின்றி கட்-அவுட்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பொதுமக்களுக்கு மிகுந்த சிரமத்தை விளைவித்து வந்தது. மேலும் உரிய பாதுகாப்பு இல்லாமல் கட்டப்பட்டுள்ள பேனர்கள் சரிந்து விழும் அபாயமும் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து நகரப்பகுதிகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை ஒருவாரத்திற்குள் அகற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் வழக்குத் தொடரப்பட்டு, அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கலெக்டர் தேவநீதிதாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து இந்திராகாந்தி, ராஜிவ்காந்தி சிலை, ராஜா திரையரங்கு, அண்ணாசாலை உள்ளிட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பேனர்கள், கட்-அவுட்டுகள் அகற்றப்பட்டன.
ஒவ்வொரு முறையும் அனுமதியில்லாமல் வைக்கப்படும் பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை அகற்றும்படி கலெக்டர் தேவநீதிதாஸ் அறிக்கை விடுவதும், அப்போது ஒருசில தினங்களுக்கு மட்டும் அதனைக் கடைபிடித்துப் பின்னர் மீண்டும் சிலர் கட்-அவுட்டுகள் வைப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. கட்-அவுட்டு மற்றும் பேனர்களை வைத்தபின்னர் அதனை அகற்றும்படி அறிக்கைவிட்டு எச்சரிக்கும் அரசு அதனை வைப்பதற்கு முன்பாகவே தடுக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அனுமதியின்றி கட்-அவுட் மற்றும் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதைத் தடுக்க தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: