"பட்டிக்காட்டான் மிட்டாய்க்கடையை வெறித்துப் பார்த்தது போல்" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அந்த பட்டிக்காட்டானுக்கும், பஞ்சுமிட்டாய்க்கும் என்ன தொடர்பிருக்குமோ அந்த அளவே எனக்கும், கணினிக்குமான தொடர்பு இருந்தது. விளையாட்டை விரும்பிய விடலைப் பருவத்தில் கணினியில் கூட விளையாடலாம் என்று என்னுடைய நண்பர்கள் கூறியதைக் கேட்டு அருகிலிருந்த இணைய மையத்திற்கு ஒருமணிநேரத்திற்கு 30 ரூபாய் கொடுத்து வீணாக விளையாட்டாய்க் கணினியில் விளையாடிக் கொண்டிருந்த எனக்கு இதற்குள் உலகமே அடங்கியிருப்பது தெரியாமல் போனது. நாள்தோறும் கணினி விளையாட்டிலேயே இருந்த வந்த என் ஆர்வம் இணையத்தின் பக்கமும் திரும்ப ஆரம்பித்தது. பின்னர் ஒரு தனியார் தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியாக எனது வாழ்க்கையைத் தொடங்கிய பிறகு கணினிக்கும், எனக்குமான இடைவெளி அதிகமானது. அலுவலகத்தில் கணினி இருந்தபோதிலும் அலுவல் தொடர்பான பணிகளை மட்டுமே பயன்படுத்துவதால் இணையத்தைப் பயன்படுத்துவதற்கு நேரம் கிடைக்காமல் போனது. அப்போது தான் தினமணி நாளிதழில் "புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் தமிழ்க்கணினி பயிலரங்கம் நடத்தப்பட உள்ளது" என்ற செய்தியைப் பார்த்தேன். இச்செய்தியைப் பார்த்ததும் எனக்குள் இருந்த கணினி ஆர்வம் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது. அதிலும் எனக்குப் பிடித்த தமிழ்மொழியில் சொந்தமாக வலைப்பதிவைத் தொடங்கலாம், நம்முடைய படைப்புகளை வெளியிடலாம் என்று அறிந்ததும் உடனடியாக பயிலரங்கில் கலந்து கொள்ள என்னுடையப் பெயரைப் பதிவு செய்துகொண்டேன்.
டிசம்பர் மாதம் ஒன்பதாம் நாள் சற்குரு ஓட்டலில் நடைபெற்ற தமிழ்க்கணினி பயிலரங்கில் பங்கேற்றேன். கணினித் துறை வல்லுனர்களும், தமிழ் மென்பொருள் தயாரிப்பாளர்களும், பேராசிரியர்களும், கலந்து கொண்டு ஒருங்குறியைப் பயன்படுத்தி தமிழ் மொழியிலேயே இணையத்தில் தட்டச்சு செய்வது, சொந்தமாக வலைப்பதிவை உருவாக்கிக் கொள்வது, ஒலி, ஒளியை இணைப்பது, திரட்டியில் இணைப்பது என்று பல்வேறு பயனுள்ள தகவல்களை பயிற்சியின் மூலம் அறிந்து கொண்டேன். முதுகலைத் தமிழ் பயின்றும் தமிழை வளர்ப்பதில் இப்படி ஒரு முறை இருப்பதை அந்த பயிலரங்கில் தான் தெரிந்து கொண்டேன். பயிலரங்கில் அளிக்கப்பட்ட மென்பொருள் குறுந்தகட்டைப் பயன்படுத்தி எனது அலுவலக கணினியில் ஒருங்குறி எழுத்துருவை நிறுவினேன். பின்னர் எனக்கென ஒரு வலைப்பதிவை ஒருவாக்கி அதில் என்னுடைய கவிதைகளை எழுதி வருகிறேன்.
மேலும் அடுத்தகட்டமாக புதுச்சேரி வலைப்பதிவர் சிறகம் சார்பில் இணையத்தில் தமிழ்வளர்ச்சியும், பயன்பாடும் என்னும் தலைப்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு இணையம் தொடர்பாக மேலும் பல தகவல்களை அறிந்து கொண்டேன். அதன் பயனாக கவிதை வலைப்பூவை உருவாக்கி எழுதிவந்த நான், தற்பொழுது புதுவையில் நடைபெறும் அன்றாட செய்திகளைப் பதிவு செய்வதற்காக சற்றுமுன் புதுச்சேரி என்ற புதிய வலைப்பூவை உருவாக்கியுள்ளேன்.
"சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்"
என்னும் மகாகவி பாரதியின் வாக்குக்கு ஏற்ப என்னைப் போல் எத்தணையோ தமிழ் ஆர்வலர்களுக்கு இணையத்தை கொணர்ந்துச் சேர்த்த புதுச்சேரி வலைப்பதிவர் சிறகத்திற்கு இந்த வலைப்பூ சமர்ப்பணம் . . .

No comments:
Post a Comment