Thursday, June 19, 2008

வீடுகட்ட மானியம் வழங்க வலியுறுத்தி குருவிநத்தம் பகுதி மக்கள் குடிசைமாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்

வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் தாங்கள் வசிக்கும் குடிசைகளை கல்வீடுகளாகக் கட்டிக்கொள்ள காமராஜர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் அரசு ஒரு லட்ச ரூபாயை மானியமாக வழங்கி வருகிறது. அந்தவகையில், குருவிநத்தம் தொகுதியைச் சேர்ந்த கிராமமக்கள் 200-பேர் இத்திட்டத்தின் கீழ் தங்கள் குடிசைவீடுகளை மாற்றியமைப்பதற்காக வின்னப்பித்திருந்தனர். இவர்களுக்கு நேற்று மானியத்தொகை வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பதிவு செய்திருந்த 60 பேருக்குத் மானியத்தொகை வழங்கப்படமால், பதிவு செய்து 20 நாட்களே ஆன 20 பேருக்கு நேற்று மானியத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகக் புகார் தெரிவித்து பஞ்சாயத்துத் தலைவர் ராஜாராம், வார்டுஉறுப்பினர் மூர்த்தி, குருவிநத்தம் இளைஞர் காங்கிரஸ் தலைவர் முத்து ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தங்களுக்கு மானியம் வழங்காதது குறித்து அலுவலர்களிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அலுவலர்கள், உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் தங்களால் பதில் கூற முடியாது என்று தெரிவித்தனர். இதனால் கிராமமக்களுக்கும், அலுவலர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தங்களுக்கு மானியத்தொகை வழங்காதது குறித்து உரிய விளக்கம் அளிக்கும் வரையில் அலுவலகத்தை விட்டுச் செல்லமாட்டோம் என்று கூறி கிராமமக்கள் அங்கேயே அமர்ந்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விடுபட்டவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி மானியம் வழங்கப்படும் என்று அலுவலகத்தில் அறிவிப்புப் பலகையொன்று வைக்கப்பட்டது. ஆனால் தங்களுக்கு இன்றே மானியத்தொகை வழங்க வேண்டும் என்று கூறி கிராமமக்கள் அறிவிப்புப் பலகையை வீசியெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் மானியத்தொகை வழங்கும் வரையில் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என்று கூறி தொடர்ந்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

No comments: