Wednesday, June 18, 2008

புதுவை அரசுப்பள்ளிகளில் அடுத்தமாதம் முதல் வீடியோ கான்பெரன்சிங் மூலம் சிறப்புப் பயிற்சி வகுப்புகள் - கல்வியமைச்சர் ஷாஜகான் அறிவிப்பு

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் வகையில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு வீடியோ கான்பெரன்சிங் மூலம் பயிற்சி வகுப்புகள் நடத்த அரசு முடிவெடுத்துள்ளது. முதற்கட்டமாக ஐம்பது பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பள்ளிகளில் வீடியோ கான்பெரன்சிங் வசதிகள் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. காலாப்பட்டு செவாலியர் செல்லான் அரசு மேனிலைப் பள்ளியில் வீடியோ கான்பெரன்சிங் அமைப்பபதற்கான பணிகளை அமைச்சர் ஷாஜகான் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப்பள்ளிகளில் அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. அரசுப்பள்ளிகளில் மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்தினால் தேர்ச்சி விகிதம் அதிகரிக்கும் என்று தலைமை ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் அனைத்துப் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் வீடியோ கான்பெரன்சிங் மூலம் திறமை வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்டு சிறப்புப் பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இத்திட்டம் அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து செயல்படுத்தப்பட உள்ளது" என்றார்.
இதன்மூலம் மாணவர்களுக்கு பாடத்தில் உள்ள ஐயங்கள் களையப்படுவதோடு மட்டுமின்றி, ஆங்கில உரையாடல்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படும். மேலும் ஒவ்வொரு பள்ளி மாணவர்களிடையேயும் வீடியோ கான்பெரன்சிங் மூலம் தானாகவே நேரிடையாக அந்தந்த பள்ளிகளில் உள்ள வசதி குறைபாடுகள், கல்விமுறைகள் குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். முன்னதாக அப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை அமைச்சர் ஷாஜகான் வழங்கினார். பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் முருகேசன் மற்றும் திரளான ஆசிரியர்களும், மாணவ - மாணவியரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments: